Monday, April 8, 2013

காதல் கவிதைகள் (2)

தினம் வரும் தென்றல்
வருடாந்திரம் வரும் புயல்
எப்போதாவது வரும் ஆழிப்பேரலை
சூரியனிலும் வரும் சூறாவளி
இயற்கையில்
உலகம் முடிக்கும் ஊழித்தீ...

இயற்கையில் நிகழ்ந்தால்
நிகழ்ந்து விட்டுப் போகட்டும்
வேண்டாம் என்று
காதலுக்கு
கதவடைக்க நாம் யார்?
***

முதல் சில துளிகளுக்கு
சுருங்கும் மனம்
நனைய நனைய
முழுதாய் லயித்து விடுகிறது
பின் குடை எதற்கு
உடை எதற்கு?
***

முள்ளாயிருந்த படுக்கையில்
அரைத்தூக்கத்தில்
புரண்டு புரண்டு
கண்ணயர்ந்தது எப்போது?

காலையில்
என் தலையணை
உறையற்றிருந்தது
கனவில்
நீ வந்திருந்ததாக
ஞாபகம் இப்போது.
***

தலையணை என் முத்தங்களை
ஈரமாக்குவதில்லை
என்னை திரும்ப
அணைப்பதுவும் இல்லை
வெட்கங்களை தூர வீசி
வேகமான மோகமொன்று
நிகழ்த்த  உடனே வா