மரணம் பற்றி சில குறிப்புகள்...
இருவர் சுமந்ததை
நால்வர் சுமக்கும்
தருணம்.
***
பிணத்தின் முகம் பார்த்தும்
சலனப்படாத மனதை
கள்ளம் கபடமற்ற பாசத்தின்
கண்ணீர் கரைத்து விடுகிறது
***
அப்பன் சாவான்
மகன் சாவான்
பேரன் சாவான்
ஒரு தலைமுறையின்
மிகச் சிறந்த வரம் இது
முறை பிழற்தல்
முன் வினைச் சாபம்
***
இறுதி யாத்திரையில்
இறைவனை விளித்து
ஒற்றை கூக்குரல்
உடைகிறது நெஞ்சு
வலுவிழக்கின்றன கால்கள்
***
விடையனுப்பி
கழுவித் தள்ளிய
வீட்டில்
சம்மந்தி வீட்டார்
சாதம்
தவிர்க்க முடியாதது
வயிற்றின்
அமிலம்
***
விதி எத்தனயோ
வழி செய்திருக்கிறது
ஆனால்
என் வீட்டிலிருந்து
காட்டிற்க்கு
ஒரே வழி
***
எத்தனை தயாராய்
இருந்தாலும்
இது வலிதான்
இது துயரம்தான்
***
சிலர் சிலருக்கு
இறந்த பின்தான்
அறிமுகம் ஆகிறார்கள்
***
மயானத்தில் கூட
எல்லாரும் விட்டுப்
போனப்பின்தான்
அமைதி.
இப்போது வருகிறது
என்
தூக்கம்.
***
No comments:
Post a Comment